பாவல் நவகீதன், சாய்ஸ்ரீ, சிந்து குமரேசன், விக்னேஷ் ரவி மற்றும் பலர் நடிப்பில் ஹரி K சுதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மரியா.
படம் என்ன சொல்ல வருகிறது ?
கிறிஸ்தவ மதத்தில் கன்னியாஸ்திரியாக இருக்கும் நாயகி கான்வென்டில் இருந்து விடுமுறைக்காக தன் தூரத்து உறவுப்பெண் வீட்டுக்கு வருகிறார்.. அங்கு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவரின் உறவுப்பெண் மற்றும் நண்பர்களின் வாழ்வியலை பார்த்து ஏக்கம் கொள்கிறார். தன் கன்னியாஸ்திரி உடையை துறக்க, அதே சமயம் சைத்தானின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அவ்வழியில் சென்று சிற்றின்பத்தையும் சிறிய வாழ்க்கையையும் வாழத் தொடங்குகிறார். பிறகு என்ன ? அதுவே மரியா..
மரியா கதாபாத்திரத்தில் நாயகி கன்னியாஸ்திரி ஆக கடவுளின் வேலைக்காரியாக மிக அழகாக படத்தின் துவக்கத்தில் வந்து பிறகு காமத்தின் சத்தத்தை கேட்டு இச்சைக்கு ஆசைப்பட்டு தன் தாயிடம் துறவத்தை திறக்க ஆசைப்படுவதாக சொல்ல, அதே சமயம் தாய் எதிர்க்க, நீ அனுபவிக்க வேண்டிய விஷயத்தை அனைத்தையும் அனுபவித்து விட்டாய் நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று கூறும் இடம் கதையின் கரு என்று நமக்கு தெரிய வருகிறது,
கிறிஸ்தவ மதம் வாழ்வியலை நெறிப்படுத்தி வாழ வழி செய்கிறது, அதற்கு எதிர்ப்பதமாக சைத்தானின் வாழ்வியல் முறை ஆசைப்பட்டதை செய், நினைத்ததை நடத்து, பிடித்ததை செய்.. இப்படி எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட சைத்தானை வழிபடும் ஒரு கூட்டம். இது உண்மையா பொய்யா என்று நமக்கு தெரியாது. ஆனால் படம் அதை தான் சொல்ல வருகிறது.
ஒரு வாலிப வயது பெண் இச்சைக்கு ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் இச்சையின் துவக்கம் சுவைப்பது என்பது அருவருப்பின் உச்சம். அதற்கு இவர்கள் ஒரு நீலப்படமே எடுத்து விடலாம். எதற்கு இந்த படம் என்பது எனக்கும் புரியவில்லை. பார்ப்பவர்களுக்கும் புரியவில்லை. எதை சொல்ல வருகிறது. படம் கிறிஸ்துவ கோட்பாட்டுக்கு ஆதரவா இல்லை கிறிஸ்துவ கோட்பாட்டிற்கு எதிர்ப்பா அல்லது துறவறம் தவறா ? இச்சைகளை அடக்கி ஆள்வது தவறா என்று எதை சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை.
படத்தின் துவக்கத்தில் ஏதோ புதுமையாக சொல்ல வருகிறார்கள் என்று நினைத்தால் அந்த புதுமை படம் பார்க்கும் நமக்கு அதன் மேல் ஒரு வெறுப்பை கூட்டுகிறது. அதேபோல் இறுதிக்காட்சியில் வசனம் அவள் என்ன செய்து கொண்டிந்தாள் என்று கேட்கும்போது அதற்கு அவள் ஓ……….. கொண்டிருக்கிறாள் என்ற வசனம் நம் வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.
மரியா- இது சரியா ?