பூர்வீகம் ; விமர்சனம்

பல புது முகங்களோடு நமக்குத் தெரிந்த முகங்களும் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் பூர்வீகம்

போஸ் வெங்கட் கிராமத்து வாசி. தனது மகனுக்கு சொந்தத்தில் பெண் எடுக்காமல் தன் நிலங்களை விற்று மகனை பட்டணத்தில் படிக்க வைத்து அரசு வேலை வாங்கித் தந்து திருமணம் செய்து வைக்கிறார்.

அதன் பின் பேரனின் பிறந்த நாளுக்கு செல்லும் போஸ்ட் வெங்கட் மருமகளால் அவமானப்பட்டு பஸ்ஸுக்கு காசு இல்லாமல் மாடு ஏற்றும் லாரியில் ஊர் வந்து சேர்கிறார். தந்தையைக் காண மகனும் ஊருக்கு வர மருமகளுக்கு கோபம் வரப்போகிறது, நீ செல் என்று திருப்பி அனுப்பி விடுகிறார்.

- Advertisement -

தந்தை சொல்படி வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நாயகன் கதிர், இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருப்பதோடு, தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது வெகுளித்தனமான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்

தந்தையின் அருமை தெரிந்த மகன் மனம் கலங்குகிறார். கிராம வாழ்க்கை, பட்டணத்து வாழ்க்கை இரண்டு வாழ்க்கை முறைகளை சொன்ன இயக்குனர் 1960ல் சென்று அந்தக் காலத்தில் நடக்கும் திருமணம், அதன் காதல், குடும்பம் என பூர்வீகத்தை அலசி ஆராய்ந்து இருக்கிறார்.

தந்தையின் அருமை தான் தந்தையாகும் போது தான் புரியும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார். நம் மண் சார்ந்த விவசாயத்தின் அருமையையும் அதன் முக்கியத்துவத்தையும் பூர்வீகம் படத்தின் மூலம் மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்